மாநில பயிர் விளைச்சல் போட்டியில் நாமக்கல் விவசாயிக்கு இரண்டாமிடம்
மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற, நாமக்கல் மாவட்ட விவசாயிக்கு எம்எல்ஏ ராமலிங்கம் பரிசு வழங்கினார்.
வேளாண்மைத்துறை சார்பில், 2019-20ம் ஆண்டிற்கு மாநில அளவிலான பயிர்விளைச்சல் போட்டி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் தாத்தையங்கார்ப்பட்டியைச் சேர்ந்த விவசாயி குமாரசாமி என்பவர் இப்போட்டியில் பங்கேற்றார்.
அவர் ஒரு ஏக்கர் பரப்பில் பாசிப்பயறு பயிரிட்டு 2,750 கிலோ மகசூல் பெற்றார். அவருக்கு மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்தது.
இதையொட்டி தமிழக அரசின் சார்பில் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.
வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், புதுச்சத்திரம் உதவி இயக்குனர் பேபிகலா, வேளாண்மை அலுவலர் தரணியா, உதவி அலுவலர் பழனிவேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.