திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர் தங்கமணி

திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வருகிறது என முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-01-25 15:15 GMT

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள, மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ,மாவட்ட இளைஞரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தலைமை வகித்தார்.

பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர், திருச்செங்கோடு முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மயில் சுந்தரம், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர் வரவேற்றார்.முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மொழிப்போர் தியாகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை பார் முழுமையாக மூடப்படும் என அதிமுக அரசு கூறியது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். முன்னள் முத ல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேலும் 500 டாஸ்மாக் கடைகளை குறைத்தார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படம் என்று தேர்தல் வாக்குறுதியில் திமுகவினர் தெரிவித்தனர்.

தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், பார்கள் படிப்படியாக அதிகப்படுத்தி வருகின்றனர். பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் இருந்தது. தற்போது அங்கு இரண்டு கடைகளை திறந்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுக்கடைகள் கொண்டு வரக்கூடாது என கலெக்டரிடம் பொது மக்கள், அரசியல் கட்சியினர் முறையிட்டனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதுகுறித்து மதுரை ஐகோர்ட் விமர்சனம் செய்துள்ளது.

மத்திய அரசு திட்டங்களான குறிப்பாக 8 வழிச்சாலை திட்டங்களை திமுக எதிர்த்தது. தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆட்சியில் இல்லாமல் இருக்கும்போது திமுக நிலைப்பாடு வேறு, ஆட்சியில் இருக்கும் போது திமுக நிலைப்பாடு வேறாக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக வெற்றிபெறும். இந்த தேர்தலை 4 மாதம் தள்ளி வைக்க வேண்டும் என திமுகவே வழக்கு தொடர்ந்துள்ளது. 8 மாத காலத்திலேயே பொதுமக்களை சந்திக்க திமுகவிற்கு பயம் வந்து விட்டது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வகுரம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா ரகுமான், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் கோபிநாத், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் குமுதம் நாகராஜன், நாமக்கல் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் லியாகத் அலி, மோகனூர் கூட்டுறவு சர்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார். அணியாபுரம் முன்னாள் பஞ். தலைவர் நமேஷ், நாமக்கல் நகர துணைசெயலாளர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News