திருச்செங்கோட்டில் 19ம் தேதி, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

Namakkal news- திருச்செங்கோடு தாலுகாவில், வரும் 19ம் தேதி நடைபெற உள்ள ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

Update: 2024-06-15 00:30 GMT

Namakkal news-திருச்செங்கோட்டில் 19ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் (மாதிரி படம்)

Namakkal news, Namakkal news today- திருச்செங்கோடு தாலுகாவில், வரும் 19ம் தேதி நடைபெற உள்ள உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை, தமிழக முதல்வர், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி துவக்கி வைத்தார். இதையொட்டி, திருச்செங்கோடு தாலுகாவில், வரும் 19ம் தேதி, மாவட்ட கலெக்டர் உமா தங்கி, அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நாமக்கல், ராசிபுரம் ஆகிய தாலுகாக்களில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தின்படி, வரும் 19ம் தேதி, கலெக்டர் உமா மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9 முதல் மறுநாள் காலை 9 மணி வரை, திருச்செங்கோடு தாலுகாவில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்கின்றனர். ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காணப்படும். மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின்படி, வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல், திருச்செங்கோட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் பல்வேறு திட்டங்கள், சேவைகள் செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறைகள் சார்ந்த உயர் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்கின்றனர். மாலை 4 முதல் 6 மணி வரை, திருச்செங்கோடு பி.டி.ஓ., அலுவலகத்தில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும். மாலை 6 மணி முதல் கள ஆய்வு அறிக்கையுடன் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட, இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News