நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், புதிய சூப்பர் மார்க்கெட்டை, மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் திறந்து வைத்தார்.
நாமக்கல் நகரில், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளார் கூட்டுறவு விற்பனைச் சங்கம் (என்சிஎம்எஸ்) உள்ளது. இதன் ஒரு பிரிவாக கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி புதிய சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
இந்த சூப்பர் மார்க்கெட்டில், திருச்செங்கோடு (டிசிஎம்எஸ்), சேலம், பெருந்துறை, ஈரோடு, சிதம்பரம், சத்தியமங்கலம், கொல்லிமலை ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளான அரிசி, பருப்பு, மஞ்சள், குங்குமம், ராகி மாவு, நாட்டுச்சர்க்கரை, பொடி வகைகள், மசாலா பொருட்கள், தேன், காபி தூள், டீ தூள், காதி பொருட்கள், ஆவின் பொருட்கள் மற்றும் பழவகைகள் உள்ளிட்ட வீடுகளுக்கு தேவையான அனைத்து தரமான பொருட்கள், நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடையலாம் என இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்தார். விழாவில் நாமக்கல் மற்றும் இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க செயலாட்சியர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், சங்கப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.