வேளாண் பொறியியில் துறை சார்பில் குறைந்த வாடகையில் இயந்திரங்கள்

நாமக்கல் மாவட்டத்தில், விவசாயிகளுக்குக் குறைந்த வாடகையில் டிராக்டர், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகிறது.

Update: 2021-07-26 02:40 GMT

இது குறித்து மாவட்டகலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:  வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், பல்வேறு நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகின்றது.

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயன் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான 3 மண் தள்ளும் இயந்திரங்கள், 6 டிராக்டர்கள், 2 ஜேசிபிக்கள், ஒரு ஹிட்டாச்சி எக்சவேட்டர், டிராக்டரால் இயக்கக் கூடிய வைக்கோல் களைத்திடும் கருவி, சோளத்தட்டு அறுக்கும் கருவி, டிராக்டர் ட்ரெய்லர், வைக்கோல் கட்டும் கருவி, நிலக்கடலை செடிபிடுங்கும் கருவி, 9 கொத்து கலப்பை, 11 கொத்துக்கலப்பை, இயந்திர நடவு கருவி, கரை உயர்த்தி விதைநடும் கருவி, நிலக்கடலை செடியிலிருந்து நிலக்கடலை பறிக்கும் கருவி ஆகிய உபகரணங்கள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

டிராக்டரால் இயக்கக்கூடிய அனைத்து கருவிகளுக்கும், டிராக்டருடன் 1 மணி நேரத்திற்கு வாடகை ரூ.340, மண் தள்ளும் இயந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.840, ஜேசிபி இயந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.660, எக்சவேட்டர் பொக்லைன் இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1440 என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது.

விவசாயிகள் இந்த இயந்திரங்களை வாடகைக்கு பெறுதல் தொடர்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் பொறியல்துறை செயற்பொறியாளர், வசந்தபுரத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் மற்றும் சேலம் ரோட்டில் உள்ள உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News