நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டில் 270 வழக்குகள் பதிவு: எஸ்.பி., தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 2021 ம் ஆண்டில் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் எஸ்பி தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-01 11:00 GMT

சரோஜ்குமார் தாக்கூர், நாமக்கல் எஸ்.பி.,

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி சரோஜ்குமார் தாகூர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

கடந்த 2020 ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் மொத்தம் 217 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில், நகை திருட்டு, வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி, டூ-வீலர்கள் திருட்டு, கொலை, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் அடங்கும். 2021ம் ஆண்டில் மொத்தம் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் கொலை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மல்ல சமுத்திரம் பகுதியல் மட்டும் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. 99.63 சதவீத வழக்குகளில் உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வழக்குகளுக்கும் கோர்ட்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதிலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை வழக்கில் மொத்தம் 10 ஆயிரம் கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கில் 400 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, கைதான 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை, திருட்டு, குட்கா, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் 15 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். முந்தைய ஆண்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் விசாரணைக்கு எடுக்க உள்ளோம்.

கொல்லிமலையில் அனுமதியின்றி வைத்திருந்த 300 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் டூ- வீலர்களில் சென்று 20 வழிப்பறிகளை செய்த தினேஷ்குமார் என்பவரை நாமக்கல் போலீசார் கைது செய்தனர். வரும் 2022 ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரிக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஓராண்டில் சிறப்பாக பணியாற்றிய 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் எஸ்.பி அலுவலகப் பணியாளார்ளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் வழங்கினார்.

Tags:    

Similar News