நாமக்கல்லில் நவம்பர் 12ம் தேதி தேசிய லோக் அதாலத்

Lok Adalat Date -நாமக்கல்லில் நீதிமன்ற வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண உதவும் மெகா லோக் அதாலத் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-10-11 05:45 GMT

பைல் படம்

Lok Adalat Date -லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம். இது உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன் கீழ் வருகின்றது. 

சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19-தின் படி, மக்கள் நீதிமன்றம், 3 பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர், மூன்றாம் நபர் வழக்கறிஞர் என மூவர் கொண்ட அமர்வாக இருக்கும் 

நாமக்கல்லில் நவம்பர் 12ம் தேதி  தேசிய லோக் அதாலத் நடைபெறவுள்ளது. இது குறித்து, மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவ:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி சார்பு நீதிமன்றம், சேந்தமங்கலம் நீதிமன்றம் மற்றும் குமாரபாளையம் நீதிமன்றத்தில், வரும் நவம்பர் 12ம் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

ஏற்கனவே கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள், செக் தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் இந்த கோர்ட்டில் விசாரிக்கப்படும்.

லோக் அதாலத் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள், கோர்ட்டில் மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால், சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு கண்வு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 6, 2014-ல் சேலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய லோக் அதாலத்தில், சுமார் ஐம்பதாயிரம் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 42,695 வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் சமரச தீர்வு காணப்பட்டது. வழக்குகளில் ஏற்பட்ட தீர்வுகள் மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.31 கோடியே 10 லட்சம் வழங்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News