வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பவித்ரோற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் பவித்ர உற்சவம் கடந்த 30ஆம் தேதி துவங்கி ஏழு நாட்கள் நடைபெற்று இன்று நிறைவு பெறுகிறது.

Update: 2023-09-06 13:15 GMT

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வந்த பவித்திர உற்சவத்தில் இறுதி நாளில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மாட வீதிகளில் புறப்பாடு கண்டபோது

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் பவித்ர உற்சவ நிறைவு நாளில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எம்பெருமான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் .மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம்.

இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும். இந்த உற்சவத்தில் உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும்.

திருவாராதனம் சமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை இவ்விழாவால் பெருகும்.

அவ்வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் கடந்த 30ம் தேதி துவங்கி செப். 6 ம் தேதி வரை நடைபெறுகிறது.

காலை மாலை என இரு வேலைகளில் ஆராதனைகள் நடைபெறும். மாலையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எம்பெருமான் திருவடி கோவில் வரை புறப்பாடு செல்வார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் நடைபெற்று வந்த பவித்ரோத்ஸவத்தில் இன்று ஏழாம் நாள் புறப்பாடு கண்ட ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீதேவி பூதேவியுடன்

கடைசி நாளான இன்று மாலை 5 மணி அளவில் எம்பெருமான் மலர் மாலைகள் சூடி ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

அதன் பின் சிறப்பு பூஜைகள் சிறப்பு வழிபாடு என சுமார் 3 மணி நேரம் நடைபெறும். நிறைவு நாளில் எம்பெருமானை தரிசிக்க வழிநெடுக்கிலும் பக்தர்கள் சூடம் ஏற்றி வரதராஜரை வழிபட்டனர்.

Tags:    

Similar News