பெயர் தான் வளத்தோட்டம்: போதுமான வளம் இல்லாமல் வாழும் கிராம மக்கள்
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளத்தோட்டம் கிராமத்திற்கு பேருந்து வசதியில்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் நகரிலிருந்து 6கீமீ தூரத்தில் அமைந்துள்ளது வளத்தோட்டம் கிராமம். பாலாற்று கரையோரம் அமைந்துள்ளதால் விவசாயத்தினை பிரதான தொழிலாக கொண்டு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது.
மேலும் வசந்தம் நகர் , பல்லாவரம் உள்ளிட்ட கிராமங்களும் இதனையொட்டி உள்ளன. இவர்கள் அனைவரும் பேருந்து வசதிக்காக குறைந்தபட்சம் 4கி.மீ செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இங்கு வாழும் மக்கள் கல்வி , வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளுக்கு செல்ல ஆட்டோ , இருசக்கர வாகனத்தில் தான் செல்ல முடியும். இதற்கான சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு சாதகமாக இல்லை .
மழை காலத்தில் பல்வேறு சாலை விபத்தில் இங்குள்ள மக்கள் சந்திக்கும் நிலையில் இது குறித்து பல முறை சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சாலை வசதி கோரி பொதுமக்கள் மனு அளித்த நிலையில் இதுவரை போதிய நிதி இல்லை என்பதால் நிறைவேறாது உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி என இருவகையில் இருந்தும் சாலை வசதிக்காக போராடும் நிலையில் உள்ளதாகவும், பேருந்து வசதி தான் இல்லை ரோடாவது போடலாமே என இன்று அப்பகுதிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களும் மீண்டும் கோரிக்கை வைத்தனர்.