காஞ்சிபுரம்: விடுமுறைக்கு சென்ற பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை
மருத்துவ சிகிச்சைக்காக விடுமுறை எடுத்து சென்ற காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி காவலர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காடு தாலுக்கா, சாத்தூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது-26) என்பவர் காஞ்சிபுரம் காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 2ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக 15 ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பு பெற்று தனது கிராமத்திற்கு சென்றுள்ளார்.
நேற்று, காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு செல்லும் வழியில், வாலாஜாபேட்டை சுங்கசாவடியில் இறங்கி தனது தந்தைக்கு போன் செய்து தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார்.
உடனடியாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்ட நிலையில், வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்ன சமுத்திரம் டோல்கேட், அருகில் லேஅவுட் பகுதியில் உள்ள புங்கமரத்தில் வேட்டியில், ஓருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவ்வழியாக வந்த பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடமைகளை சோதனை செய்தபோது விக்னேஸ்வரன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.