சங்கர மடம் அருகில் குடிநீர் குழாய் பழுதாகி சாலையில் வழிந்தோடும் அவலம்

பிரதான சாலையில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

Update: 2022-03-15 04:45 GMT

சாலையில் வீணாக ஓடும் குடிநீர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கோடைகாலம் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை உருவாகும் என புதியதாக பதவியேற்ற மேயர்  மகாலட்சுமியுவராஜ் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பிரதான சாலைகள் என வள்ளல் பச்சையப்பர் தெரு காமராஜர் தெரு மற்றும் சங்கரமடம் எதிரில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பினால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடி கழிவு நீரில் கலக்கிறது.

இதுகுறித்து பலமுறை செய்தித்தாள்களிலும் நேரடியாகவும் பொதுமக்கள் குறைகளை தெரிவித்தாலும் மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று குடிநீர் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் பல மாதங்களாக காமராஜர் சாலையில் பச்சையப்பன் தெருவில் உடைப்பை சரிசெய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் வாகன விபத்தை  சந்திக்கும் நிலையும், சாலையில் ஓடும் வாகனங்களால்  பொதுமக்கள் மீது நீர் தெளித்து அசுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

Similar News