காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கு மேல் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Update: 2023-01-10 14:00 GMT

திருப்பருத்திகுன்றம் கிராம ஊராட்சியில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு  தலைவர் மலர்க்கொடி குமார் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கிய போது உடன் தலைவர் மலர் ராமச்சந்திரன்

தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் வருடம் தோறும் பொங்கல் பரிசுகள் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்குவது வழக்கம்.

அவ்வகையில் இந்த வருடம் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை முழு நீள கரும்பு மற்றும் ரொக்கமாக ரூபாய் ஆயிரம் அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர்  ஸ்டாலின் அறிவித்தார்.

அவ்வகையில் நேற்று சென்னையில் பொங்கல் பரிசு வழங்கும் பணிகளை முதல்வர் துவக்கி வைத்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் மூன்று லட்சத்து 934 குடும்ப அட்டைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் எனவும் நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்ட நெரிசல் இன்றி பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் நியாய விலை கடைகள் ஊழியர்கள் வழங்குவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பரிசுப் பொருட்கள் முறைகேடு இன்றி வழங்குபடுவதை உறுதி செய்யும் வகையில் இதற்கென நியமிக்கப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் குழு கண்காணிப்பாளர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று நியாய விலை கடைகளை ஆய்வு மேற்கொள்வர்.

இந்த நிலையில் நேற்று துவக்க நாளான அன்று 94,220 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்றும் ஒரு லட்சம் நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் எனவும் மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.

மொத்தத்தில் 50 சதவீதத்திற்கு மேல்  குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

வருகிற 13-ஆம் தேதி வரை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் நெரிசல் இன்றி பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார் நேரில் சென்று பொது மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News