வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: வேகவதி ஆறு சீரமைப்பு பணி 'விறுவிறு'
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேகவதி ஆறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பரில் துவங்கும். கடந்த 2015ல் பெய்த பெருமழையால், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , சென்னை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, பொதுமக்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். இதையடுத்து, தமிழகத்தில் வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு, நீர்நிலைகள், கால்வாய்கள் உள்ளிட்டவைகளை சீரமைக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில், காஞ்சிபுரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்டவைகள் மூலம் கால்வாய்கள் தூர்வாரும் பணி துவங்கியது. காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில், மஞ்சள் நீர் கால்வாய், திருக்காளிமேடு உள்ளிட்ட பல பகுதிகளில், கால்வாய்கள் தூர்வாரும் பணியை, காஞ்சிபுரம் பெருநகராட்சி செயல்பட்டு வருகிறது.
அதேபோல், காஞ்சிபுரம் நகரின் வழியாக செல்லும் வேகவதி ஆறு, கடந்த 2015க்கு பிறகு வருடந்தோறும் தொடர்ச்சியாக ஆற்றில் உள்ள கோரைப்பற்கள் மற்றும் மணல் அடைப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு முறையான நீர் வழித்தடமாக மாற்றப்படுகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செல்லும் பகுதியில் தற்போது இரண்டு தூர்வாரும் இயந்திரங்கள் மூலம் வேகவதி ஆறு சீரமைக்கப்படும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.