மாண்டஸ் புயல்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதம்.. இருவர் உயிரிழப்பு...

மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதமடைந்தன. மின்சாரம் பாய்ந்து இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Update: 2022-12-10 12:15 GMT

காஞ்சியுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேட்டியளித்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக 18 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பது உட்பட மொத்தம் மாவட்டத்தில் 80 சென்டி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள 381 குளங்களில் 146 முழுமையாகவும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 380 குளங்களில் 135 குளங்கள் 75 சதவிகிதமும், 6 குளங்கள் முழுக் கொள்ளவையும் எட்டியிருக்கின்றன.

மாவட்டத்தில் 110 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. 31 கால்நடைகளும், காஞ்சிபுரத்தில் 2680 கோழிகளும், உத்திரமேரூரில் 400 கோழிகளும் உயிரிழந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 65 நிவாரண முகாம்களில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 2240 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

தாட்டித்தோப்பு பகுதியில் தரைபாலத்தை தாண்டி தண்ணீர் செல்வதால் சேதம் ஏற்பட்டு பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. சேதம் அடைந்துள்ள தரைபாலத்தை சரிசெய்வதற்காக 6 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு வீராணம் குழாய்கள் பொருத்தப்பட உள்ளது. குழாய் பொருத்தப்பட்டவுடன் கனரக வாகனமும் செல்லும் வகையில் சரிசெய்யப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கத்தில் மரம் சாய்ந்து மின்கம்பி மீது விழுந்ததில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களான சுபன்குமார்(23), நிரஞ்சன்குமார் (22) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். பலத்த காற்று வீசியதன் காரணமாக மாவட்டம் முழுவதும் 203 மரங்கள் சாய்ந்து விழுந்தன.அவற்றில் 151 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. சாய்ந்து விழுந்து கிடந்த மரங்களை அகற்றியதில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையின் பணி பாராட்டுக்குரியது.

117 மின்கம்பங்கள் சாய்ந்தும், 25 தெருவிளக்குகள் பழுதாகியும் இருந்தன. அவற்றை மின்வாரியத்தினர் இரவோடு இரவாக சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது பணியும் பாராட்டுக்குரியதாகவே இருந்தது. கன மழையின் காரணமாக தாமல் ஏரியிலிருந்து அதிகமான நீர் வெளியேறி எம்ஜிஆர்.நகர், முருகன் நகர், தேனம்பாக்கம், தாட்டித் தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்று விட்டது.

வரதராஜபுரம், குன்றத்தூர்,மாங்காடு ஆகிய பகுதிகளிலும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்று விட்டது.தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேகவதி ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறோம், அவர்களுக்கென்று கீழ்கதிர்பூரில் 2204 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்திற்குள் வீடுகளில் குடி அமர்த்த உள்ளோம்.

புயல் பாதிப்பு குறைந்தாலும் இன்னும் சில தினங்களுக்கு மழை தொடரும் என்பதால் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வரும். வேளாண் பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம் எந மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.

பேட்டியின்போது, மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், கூடுதல் கண்காணிப்பு அலுவலர்கள் ஹரிஹரன், விஜயராஜ்குமார், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News