ரத சப்தமியையொட்டி சூரிய பிரபை வாகனத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள்
ரதசப்தமி தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார்
ரத சப்தமி நாளின் சிறப்புகள் பலருக்கும் தெரிவது கிடையாது. பலவிதமான சிறப்புகளை தரும் இந்த நாள் சூரிய ஜெயந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுவது உண்டு. வழக்கமாக தை மாதத்திலேயே ரத சப்தமி விழா கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு மாசி மாதம் இந்த நாள் அமைகிறது. இந்த நாளில் சூரியனை வழிபட்டு, சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
திதிகளில் ஏழாவது திதியாக வருவது சப்தமி. அதிலும் தை-மாசி மாதங்களில் வளர்பிறையில் வரக் கூடிய சப்தமி மிகவும் விசேஷமானதாகும். இதை ரத சப்தமி என்கிறோம். அதாவது சூரிய பகவான் தன்னுடைய ரதத்தை வட கிழக்கு திசையில் திருப்பக் கூடிய நாள் ரத சப்தமி ஆகும். இது சூரிய பகவானை வழிபட வேண்டிய மிக முக்கியமான நாளாகும். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்கக் கூடியவர் சூரிய பகவான். ஒவ்வொரு ஆன்மாவுடனும் தொடர்புடைய இவர் தான் ஜீவாத்மாவை, பரமாத்வாவுடன் இணையக் செய்து, இறுதியாக மோட்சத்தை வழங்கக் கூடியவர்.
ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ பாவ காரியங்கள் செய்துவிடுகிறோம். அதன் பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமே ரத சப்தமி விரதம் என்பதாகும்.
தை முதல் நாள் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகிறோம். தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் திதி ரத சப்தமியாகக் கொண்டாடுகிறோம்.
அவ்வகையில் இன்று அத்திவரதர் புகழ்பெற்ற காட்சி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ரதசப்தமி நிகழ்வையொட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் மலையில் இருந்து கீழே இறங்கி சிறப்பு மலர் அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து திருக்கோயில் வளாகத்தில் உள்ள மணவாள மாமுனி மற்றும் ராமானுஜர் சன்னதி வழியாக திருக்கோயில் ராஜகோபுரம் அருகே எழுந்தருளி சிறப்பு தீபாரதம் நடைபெற்று பக்தர்களுக்கு சடாரி ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
ரதசப்தமி விழாவை பற்றி காஞ்சி வரதராஜ பெருமாளின் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலில் திருக்கோவிலில் குவிந்தனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வைணவ தளங்களில் இன்று ரதசப்தமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்று காலை 6 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து, தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு வாகனத்தில் இரவு சந்திர பிரபை வாகனம் வரை மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
பல வைணவத் தலங்களில் இந்நாளில் கருட சேவை நிகழ்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோயால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வருபவர்கள், கொடிய நோய்களால் அகால மரணம் ஏற்படாமல் இருப்பதற்கும், நம்முடைய உடல் ஆரோக்கியம் பெற்று, வீட்டில் உள்ள வறுமை ஒழிந்து, செல்வ வளம் பெருகுவதற்கு ரத சப்தமி நாளில் சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டினை அனைத்து வயதினரும் செய்வது சிறப்பானதாகும். ரத சப்தமி நாளில் புனித நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது.