காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கலில் திமுகவினர் தீவிரம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில், வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான இன்று, மனுதாக்கலில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-02-04 05:45 GMT

காஞ்சிபுரம் 32 ஆவது வார்டு திமுக வேட்பாளராக சாந்தி சீனிவாசன் மனுதாக்கல் செய்தார். 

காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்,  முதன்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி,  இன்று  இறுதி நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு இல்லாததால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில்,  கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

அதன்பின் கட்சி வேட்பாளரான அங்கீகாரம் கடிதம் பெற்ற பின் நேற்று முதல் திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்வதில் தீவிரம் அடைந்து உள்ளனர். நேற்றுவரை காஞ்சிபுரம் மாநகராட்சியில் 180 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 10 மணி முதல்,  திமுகவினர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

அவ்வகையில் 32 ஆவது வார்டு திமுக வேட்பாளராக சாந்தி சீனிவாசனும், நாற்பத்தி எட்டாவது வார்டு திமுக வேட்பாளராக ஆர். கார்த்தி என்பவரும் தேர்தல் அலுவலரிடம் தங்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ராகு காலம் முடிந்து 12 மணிக்கு மேல் அதிக அளவில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய குவிந்து வருகின்றனர்.

Tags:    

Similar News