காஞ்சிபுரம் பயிர் இழப்பீடு குறித்து உரிய ஆய்வு செய்ய வேண்டும்: விவசாயிகள்
காஞ்சிபுரத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை உரியமுறையில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த பதினைந்து தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது.
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக மாவட்டத்திலுள்ள 381 ஏரிகளில் 257 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்நிலையில் நடப்பு சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மற்றும் நிலக்கடலை , கரும்பு மற்றும் காய்கறி, கீரை உள்ளிட்டவைகள் கன மழையில் நீர் வடிய வாய்ப்பில்லாத நிலையில் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது.
தற்போது வரை 566 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக வேளாண்துறையில் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வேளாண் துறை சார்பில் 33 சதவீதம் சேதம் அடைந்தால் மட்டுமே இக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும் என கூறப்பட்டு வருவதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகிறது.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்டு முறையாக பயிர் சேதங்களை கணக்கீடு விவசாயிகளுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..