கொஞ்சம் பாத்து போங்க சார்..! : காஞ்சிபுரத்தில் எமதர்ம வேஷமிட்டு வாகன ஓட்டிகளிடம் நூதன விழிப்புணர்வு

காஞ்சிபுரத்தில், விழுதுகள் தொண்டு நிறுவனம் சார்பில் எமதர்ம வேஷமிட்டு நூதனமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2022-06-12 04:15 GMT

காஞ்சிபுரம் பேருந்து நிலைய சந்திப்பில், எமதர்மன் வேடமிட்ட தன்னார்வலர், சாலை பாதுகாப்பு விதிகள், ஹெல்மட் அணிவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

காஞ்சிபுரம் விழுதுகள் தொண்டு நிறுவனம் சார்பில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளில் காலை 7மணி முதல் 10 மணி வரை 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், ஹெல்மெட் அணிதல் மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றுவதில் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 12)ரெட்டை மண்டபம் பேருந்து நிலையம் அருகே தன்னார்வலர் ஒருவர் எமதர்மன் வேடமணிந்து வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது, கொஞ்சம் பாத்து போங்க சார்... வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, டாட்டா காட்டி உங்க மனைவி, குழந்தைகள் வேலைக்கு போக வழியனுப்பி வைத்து இருப்பார்கள். ஆனால் அவுங்கள மறந்து போக்குவரத்து விதிகளையும் மறந்து அலட்சியம் காட்டாதீங்க.. எமதர்மன் உங்களுக்கு டாட்டா காட்டிருவார் என சிம்பாலிக்காக எச்சரித்தார்.

குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது பாசக்கயிறு போட்டு எமதர்மன் பாணியில் பாதுகாப்பு குறித்து கூறுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவர்களுக்கு உறுதுணையாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையும் இணைந்து களத்தில் உதவி வருகிறது.

.

Tags:    

Similar News