காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அரசியல் கட்சி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

Update: 2024-02-02 10:23 GMT

நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கியதையொட்டி காஞ்சி பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய கட்சி நிர்வாகிகள்.

திரைப்பட நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை துவக்கி தமிழக வெற்றி கழகம் என அறிவித்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அவரது கட்சியினர் கொண்டாடினர்.

தமிழ் திரைப்பட நடிகரும், இளைய தளபதி என அழைக்கப்படும் விஜய் , தனது ரசிகர்களை ஒன்றிணைத்து விஜய் மக்கள் இயக்கம் என ஆரம்பித்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், பள்ளி அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களை மாவட்டம் தோறும் அழைத்து அவர்களுக்கு நல திட்ட உதவிகள் அளித்தல், விஜய் உணவகம் என்ற பெயரில் ஆதரவற்றோர்க்கு உணவு அளித்தல் என பல்வேறு சேவைகளை செய்து வந்தார்.


தமிழகத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பலர் வெற்றி பெற்று தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தங்களது கூட்டணி அமைப்பது குறித்து தங்கள் கட்சி முதன்மை நிர்வாகிகளை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரித்தல் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு என பேச்சு வார்த்தைக்கு தயாராகி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் மன்றத்தை கட்சியாக அறிவிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக டெல்லியில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் தேர்தல் ஆணையத்தில் இதற்கான பதிவுகளை மேற்கொண்ட பின் நடிகர் விஜய் தொடர்பான அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டார்.

தமிழக வெற்றி கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி துவக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை எனவும் அதில் குறிப்பிட்டு அறிவிப்பு வெளியானது.

இந்த மகிழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தென்னரசு தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகன பேரணியாக ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம் வரை வந்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்.

Tags:    

Similar News