ஐ.. பஸ் விட்டாச்சு! காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து சேவை தொடங்கியது
ஊரடங்கு புதிய வழிகாட்டு நெறிகளை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து சேவை இன்று துவங்கியது.
தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது போக்குவரத்து சேவை நிறுத்தபட்டது. கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால், இன்று முதல் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் 4மாவட்டங்களில் பொது போக்குவரத்து துவங்கும் என தமிழக முதல்வர் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதன்படி, சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை பொதுமக்கள் நலன் கருதி இயக்கம் என அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் போக்குவரத்து கழகம் மண்டலம் சார்பில் இன்று காலை 6 மணி முதல் செங்கல்பட்டு , தாம்பரம் , சென்னை ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்தில் பயணம் செய்ய முன் கிருமிநாசினி வழங்கப்பட்டு முகக்கவசம் அணிந்த நபர்கள் மட்டுமே பேருந்தில் பயணிக்கவும், பேருந்தில் 50 சதவீத பணிகள் மட்டுமே பயணிக்க உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயக்கப்பட்ட குளிர்சாதன பேருந்துகள் தடைசெய்யப்பட்ட காரணத்தால் பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகரப் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு இன்று நகருக்குள் வரும் சூழ்நிலையால் வியாபாரிகள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.