மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
புத்தகரம் கிராம ஊராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேர்ட் தொண்டு நிறுவனம் இணைந்து 25 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்குகிறது.
ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பமும் பல தலைமுறை கல்வியலர்களாக விளங்குவர் என்பதும் , ஒரு பெண் ஊதியம் பெற்றால் குடும்பம் என்றும் சிறப்பாக இருக்கும் என்பது தற்போதைய பழமொழி.
பெண்கள் தங்கள் குடும்ப வளர்ச்சிக்காக சுய தொழில் புரிய வேண்டும் என்பதும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயை சேமிப்பு மற்றும் குடும்ப வளர்ச்சிக்கு பயன்படுத்துவார்கள் என்பதை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சுய உதவி குழுக்களை உருவாக்கினார்.
அதற்கு ஒருபடி மேல் பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் , ஆடுகள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம் வகுத்து அதை செயல்படுத்தி இன்றளவும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
மேலும் சுய உதவிக் குழுக்கள் தற்போது நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப பொருட்களை உருவாக்கி அதனை சந்தைப்படுத்தி பெருமளவு வருவாய் ஈட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கிராம அளவில் உள்ள பெண்களை தொழில் முனைவோர் ஆக்க பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கிராம ஊராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அவ்வகையில் புத்தகரம் ஊராட்சி பகுதி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் சிட்பி - SIDBI நிறுவனங்கள் சார்பில் முப்பது நாட்கள் சிறப்பு தையல் தொழில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது.
மகளிர் தொழில் முனைவோரை முன்னேற்றும் நோக்கத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கல்பனா சங்கர் ஆலோசனைபடியும் மூத்த துணை தலைவர் விஜயகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் முதன்மை பொது மேலாளர் ஜோசப்ராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கான 30 நாட்கள் தையல் பயிற்சி காஞ்சிபுரம் மாவட்டம் புத்தகரம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார் அவர்களால் குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் புத்தகரம் பகுதியை சேர்ந்த 25 பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். ஒவ்வொரு நாளும் பயிற்சி காலை 11 மணி முதல் 2 மணி வரை தையல் கலை வல்லுனர் அனுசுயா அவர்களால் நடத்தப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழும் தகுதியுள்ள நபர்களுக்கு அரசு உதவியோடு கடன் உதவிகளும் செய்யப்படும்.
ஊராட்சி தலைவர் நந்தகுமார் தனது வாழ்த்துரையில், பயிற்சியின்போது பெண்கள் ஆர்வமாக கலந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், பயிற்சி முடித்த பின்பு அது தொழிலாக மாற வேண்டிய வழிகளையும் விளக்கினார். மேலும் தொழில் ஆர்டர் எடுத்து தருவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
முதன்மை பொது மேலாளர் ஜோசப் ராஜ், பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள் பற்றியும் வாழ்த்தி பேசினார்.
இந்த பயிற்சியை ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் உதவி பொது மேலாளர் பன்னீர்செல்வம், பிரபாவதி, சுசிலா மற்றும் தலைமையிலான குழு ஒருங்கிணைத்து வழி நடத்தியது.