பொது நலன் பெரும்பாக்கத்தில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை

பெரும்பாக்கம் பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் மாமண்டூர் ஏரி நிரம்ப அதிக வாய்ப்புள்ளது என விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயி கோரிக்கை.

Update: 2023-01-27 11:45 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலாறு ஆரம்ப எல்லையான பெரும்பாக்கம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டால் வெள்ள நீர் அப்பகுதி வழியாக மாமண்டூர் ஏரி நிரம்ப அதிக வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் அப்பகுதி விவசாயி பார்த்தசாரதி கோரிக்கை வைத்தார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு பெரும்பாக்கம் தொகுதியில் ஆரம்பித்து செங்கல்பட்டு வாயலூர் பகுதியில் அதன்பின் மாமல்லபுரத்தில் கடலில் கலக்கிறது. பருவ மழை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் கனமழையிலும், காவேரிபாக்கத்தில்  இருந்து உபரி நீர் அதிக அளவில் வருவதாலும் பெருமளவு நீர் இக்கடலில் வீணாக கலந்து கலக்கிறது.

இதுகுறித்து பல்வேறு காலகட்டங்களில் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட நேரத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற .கூட்டத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி\ தற்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஈசூர் வள்ளிபுரம், வாயலூர் ஆகிய இரு பகுதிகளில் தடுப்பணைகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழையசீவரம் பகுதியில் ஒரு தடுப்பணையும் கட்டப்பட்டு தற்போது அப்பகுதியில் நீர் சேமிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களும், கூட்டுக் குடிநீர் திட்டங்களும் பயன்பெற்று வருகிறது. மீதமுள்ள நான்கு இடங்களில் தடுப்பணைகளை தற்போதைய திமுக அரசு கட்ட வேண்டும் எனவும் இது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களும் விவசாயிகளும் அவ்வப்போது அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள விஷார் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என தனது 10 முக்கிய திட்டங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் முதல்வருக்கு கோரிக்கை மூலமாக அளித்து உள்ளார். இது குறித்தும் பொதுப்பணித்துறை ஆய்வு மேற்கொண்டு இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பெரும்பாக்கம் விவசாயி பார்த்தசாரதி தடுப்பணை திட்டத்தை பெரும்பாக்கம் பகுதியில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இதற்கு பொதுப்பணித்துறை பதிளளித்தபோது ஏற்கனவே முதற்கட்ட ஆய்வு பணிகள் விஷார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும் , அருகிலுள்ள பெரும்பாக்கம் பகுதியில் இதனை அமைக்க இயலாது என பதிலளித்திருந்தனர்.

இது குறித்து விவசாய கூட்டத்தில் பேசிய விவசாயி , பெரும்பாக்கம் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டால் மாமண்டூர் ஏரிக்கு நீர்வரத்து செல்ல ஏதுவாக இருக்கும் எனவும் இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன நிலையை எட்டும் எனவும், தற்போது வெள்ளப்பெருக்கு காலங்களில் பொதுப்பணித்துறை இப்பணிகளை செய்து வருவதால் இவ்விடமே சரியான இடம் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் பொதுமக்கள் நலன் கருதி இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஏற்கனவே திருமுக்கூடல் பகுதியில் தடுப்பணை அமைத்ததற்கு அப்போது கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. தற்போது இவர் கூறும் சாத்தியக்கூறுகள் உண்மை உள்ளதா என்பதை பணித்துறை ஆய்வு மேற்கொண்டு அதை தெளிவுபடுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News