"வீடு தேடி வரும் வாக்கு சீட்டு" -கலெக்டர்

Update: 2021-03-26 13:34 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளில் மொத்தம் 2101 பேர் அஞ்சல் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 28,30 ஆகிய தேதிகளில் அவர்களது வீடுகளுக்கே இக்குழுக்கள் சென்று அஞ்சல் வாக்குகளை வழங்கி எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதையும் விளக்கி கூறுவார்கள்.

இக்குழுவில் இரு வாக்குப்பதிவு அலுவலர்கள்,ஒரு பார்வையாளர், ஒரு வீடியோ கிராபர் மற்றும் காவலர் ஆகியோர் இருப்பார்கள். இதற்கென மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் 28,30 ஆகிய தேதிகளில் வாக்களிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் மறுநாள் 31 அன்றும் வாய்ப்பு அளிக்கப்படும்.

அன்றைய தினமும் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டால் இறுதி வாய்ப்பாக ஏப்ரல் 1 ஆம் தேதி வாக்களிக்கலாம். வாக்குப்பதிவுகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். அஞ்சல் வாக்குப்பதிவு தொடர்பான விபரங்களை அரசியல் கட்சியினர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என கூறினார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார்.

Tags:    

Similar News