விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் 3 அரசு பேருந்துகள் ஜப்தி

காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் 3 அரசு பேருந்துகள் ஜப்தி.

Update: 2022-04-19 12:00 GMT

விபத்தில் இழந்த குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காமல் இருந்த அரசு போக்குவரத்துக்கழக மூன்று பேருந்துகளை பறிமுதல் செய்து நோட்டீஸ் ஓட்டபட்டுள்ளது.

சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் பாரிக்கர். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் துறையில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.இவருக்கு சாயா என்ற மனைவியும், ஜோதி, வர்ஷா என இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 2018ல் காஞ்சிபுரம் டி.கே., நம்பி சாலையில் தன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் வந்த அரசு பேருந்து மோதியதில் தேவேந்திரன் பாரிக்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்விபத்து குறித்து தேவேந்திரன் குடும்பத்தினர் போக்குவரத்து கழகம் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோரிய நிலையில் இவ் வழக்கானது காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 96.41 லட்சம் ரூபாயை போக்குவரத்து கழகம் இழப்பீடாக தரவேண்டும் என உத்தரவிட்ட நிலையில் அரசு போக்குவரத்து கழகம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அவ்விசாரணையிலும் மாவட்ட நீதிமன்றம் கூறிய தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக தரவேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து காஞ்சிபுரம் நீதிமன்ற நீதிபதி சந்திரன் இதுநாள் வரை இழப்பீடு வழங்காததால் வட்டியுடன் சேர்த்து 1.17 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும்,அதுவரை மூன்று அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து நீதிமன்றம் ஊழியர்கள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் வளாகம் வழியாக சென்ற தமிழக அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் பணிமனையைச் சேர்ந்த மூன்று பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News