168 காவல்துறையினர் விருப்ப பணியிட மாற்றம்: மகிழ்ச்சியில் காவல்துறை

ஒவ்வொரு காவல்துறையினரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு அவர்களது விருப்ப பணியிடம் குறித்து கேட்கப்பட்டு அது குறித்து ஆலோசிக்கப்பட்டு அவர்களுக்கு பணியிடம் மாற்றம் வழங்கப்பட்டது.

Update: 2023-03-06 08:36 GMT

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்  ( பைல் படம் )

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட  பல்வேறு பிரச்சினைகளை கையாள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தலைமையில்  இரண்டு கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம்  செயல்பட்டு வருகிறது.

சிவகாஞ்சி , விஷ்ணு காஞ்சி , காஞ்சி தாலுக்கா காவல் நிலையம், மாகரல், உத்திரமேரூர் , சாலவாக்கம், பெருநகர் , பாலுசெட்டி சத்திரம்,  வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் ,  ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் ஆகிய 12 காவல் நிலையங்களும், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் என மொத்தம் 14 காவல் நிலையங்களில் பல நூறு முதல் நிலை காவலர்கள் முதல் ஆய்வாளர்களை பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தம் தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் கையாண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நிர்வாக காரணங்களால் காவலர் பணியிட மாற்றம் குறித்த நிகழ்வு நடைபெறாமல் இருந்த நிலையில், இன்னும் ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையிலும், தற்போது காவல்துறையினரின் விருப்ப பணியிட மாற்றம் செய்தால் வரும் கல்வி ஆண்டுக்கான அவர்களின் குழந்தை கல்வி தடைபடாது எனவும் எஸ் பி சுதாகர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,  எஸ்.பி , 2 ஏடிஎஸ்பி , டிஎஸ்பி , தனி பிரிவு ஆய்வாளர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு 172 காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நேற்று காலை 9 மணிக்கு துவங்கிய நிலையில் ஒவ்வொரு காவல்துறையினரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு அவர்களது விருப்ப பணியிடம் குறித்து கேட்கப்பட்டு அது குறித்து ஆலோசிக்கப்பட்டு அவர்களுக்கு பணியிடம் மாற்றம் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் 35 பேரும் தலைமை காவலர் 28 பேரும் , முதல்நிலை காவலர்கள் 41 பேரும் , கிரேட் 2 காவலர்கள் 64 பேர் என 168 காவல்துறையினர் பணியிடம் மாற்றம் பெற்றனர்.

காஞ்சிபுரம் கோட்டத்தில் 123 காவல் துறையினரும்,  ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தில் 45 காவல்துறையினரும் பணியிட மாற்றம் பெற்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றிய நிலையில் தற்போது விருப்ப இடமாற்றம் பெற்றது காவல் துறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

காலை தொடங்கிய விருப்ப பணியிட மாற்றம் நிகழ்ச்சியில் உணவு இடைவெளியின்றி 7 மணி நேரம் காவல்துறையினரின் விருப்பங்களை கேட்டறிந்து பணி மாற்றம் செய்த குழுவினர் செய்கை பெரும் நெகிழ்வினை  ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News