மனைவியின் போலீஸ் காதலனை தாக்கிய கணவர் கைது
தவறான உறவு வைத்திருந்த மனைவியின் காதலனை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள இந்திலி கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் ரவிக்குமார்(வயது 33). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி அனிதா(26). அனிதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆயுதப்படையில் போலீசாக பணிபுரியும் மணிகண்டன்(27) என்பவருக்கும் முறையற்ற உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் திடீரென அனிதா காணாமல் போனார். அவரை போலீஸ் மணிகண்டன் கடத்தி சென்றுவிட்டதாக ரவிக்குமார் சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அனிதாவை கண்டுபிடித்து கணவருடன் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ௨ தினங்களுக்கு முன்னர் ரவிக்குமார் அவரது தாய் சந்திராவுடன் இந்திலி பஸ் ஸ்டாப் அருகே போய்க் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த பஸ்சில் இருந்து மணிகண்டனும் அனிதாவும் ஒன்றாக இறங்கி சென்றனர். இதைக் கண்ட ரவிக்குமார், மணிகண்டனிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் ரவிக்குமாரை திட்டி, தாக்கியதோடு, தடுத்த ரவிக்குமாரின் தாய் சந்திராவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த முன்விரோதம் காரணமாக ரவிக்குமார் இரவு நேரத்தில் காரில் 10 பேர் கும்பலுடன் சேர்ந்து மணிகண்டனை கடத்தினர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் ஏரிக்கு கொண்டு சென்று அவரை அடித்து உதைத்தனர். இதில் அலறி துடித்த மணிகண்டன் சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை கண்டதும் ரவிக்குமாரும், அவரது நண்பர்களும் காரில் ஏறி தப்பினர்.
மணிகண்டன் இதுகுறித்து சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ரவிக்குமார், கொளஞ்சி மகன் அருண்குமார்(25), ராஜேந்திரன் மகன் பாலமுருகன்(28), உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் குமார்(32, இந்திலி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், சிலம்பரசன், ராஜா, ஆனந்தகுமார், சத்யராஜ், அருள் ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரவிக்குமார், அருண்குமார், பாலமுருகன், குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.