ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் அடிக்கடி வருவதால் மக்களுக்கும் சிரமம் - பாஜக எம்எல்ஏ டாக்டர் சி சரஸ்வதி
அடிக்கடி தேர்தல் நடப்பதால் மக்களுக்கும் கஷ்டம். அரசுக்கு வீண் செலவு. நிர்வாகம் பாதிக்கிறது. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அமலாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும், என்று மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர் சி சரஸ்வதி கேட்டுக்கொண்டார்.;
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மூன்றாவது தேர்தலாகும். இவ்வாறு அடிக்கடி தேர்தல் நடப்பதால் மக்களுக்கும் கஷ்டம். அரசுக்கு வீண் செலவு. நிர்வாகம் பாதிக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை அமலுக்கு வர வேண்டும்
எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அமலாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும், என்று மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர் சி சரஸ்வதி கேட்டுக்கொண்டார்.
பாஜக தேர்தலை புறக்கணித்தாலும் வாக்களித்தது
ஈரோடு சி எஸ் ஐசிஐ பள்ளியில் அவர் தனது வாக்கினை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக தேர்தலை புறக்கணித்தாலும் ஜனநாயக கடமையான வாக்களிக்க வந்துள்ளேன்.பொதுவாக இந்த இடைத்தேர்தல் இரண்டாவது முறையாக நடக்கிறது.
மக்களிடம் இதனால் உற்சாகம் இல்லை. தேர்தல் அடிக்கடி வருவதால் மக்களுக்கும் சிரமம். எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிக்க வேண்டும். ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் இறந்து விட்டால் தொகுதியில் ஏற்கனவே வென்ற கட்சிக்கு தருவது என்றெல்லாம் யோசனை கூறப்படுகிறது. இது குறித்து சட்டம் இயற்றி தான் முடிவு செய்ய வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வருவது தான் சிறந்தது.
தேர்தல் விதிகள் காரணமாக நிர்வாகம் பாதிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் விதிகள் காரணமாக அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் என்றாலும் மேற்கு தொகுதியில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியவில்லை
முதலமைச்சர் பெரிய கட்சிகள் நேரடியாக போட்டியிடாமல் வேறு கட்சி முன்னிறுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு அவர் பெயர் குறிப்பிடாமல் கூறுகிறார் அதனால் அதற்கு விடை அளிக்க முடியாது என்றார்.