மலைப்பாதையில் லாரி பழுது-போக்குவரத்து பாதிப்பு

Update: 2021-02-10 09:45 GMT

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இந்த மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலை என்பதால் இங்கு 24 மணி நேரமும் கனரக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் நோக்கி சுண்ணாம்பு பாரம் ஏற்றி வந்த லாரி திம்பம் மலைப்பாதை 9 வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் பேருந்துகள், வாகனங்கள் செல்ல முடியாமல் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

இதனால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி லாரிகள் பழுதாகி நிற்பதும், விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை திம்பம் மலைப்பாதை வழியாக அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News