தமிழக ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி கட்டாயம்: மருத்துவஇயக்ககம் அதிரடி உத்தரவு

தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள் பதிவு உரிமம் பெற இனி ஆக்சிஜன், வென்டிலேட்டர் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என மருத்துவ இயக்ககம் அறிவித்துள்ளது.

Update: 2022-08-09 06:50 GMT

ஆக்சிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதியுடனான படுக்கை (மாதிரி படம்)

சென்னை:

தமிழகத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் பதிவு உரிமம் பெற ஆக்சிஜன், வென்டிலேட்டர் வசதி கட்டாயம் தேவை என மருத்துவ இயக்ககம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் மருத்துவ இயக்கக கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களுடைய லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும். லைசென்ஸ் புதுப்பிப்பு, அல்லது புதியதாக லைசென்ஸ் பெற இனி ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகள் இருந்தால் இனி பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகள் ,கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதுவரை 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு உரிமம் பெற பெறப்பட்டுள்ளதாகவும், அதில் அனைத்து வசதிகளும் அமைந்துள்ள 30 ஆயிரம் ஆஸ்பத்திரிகளுக்கு மட்டுமே பதிவு உரிமம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இதுவரை 5 ஆயிரம் ஆஸ்பத்திரிகள் பதிவு உரிமத்தைப் பெற்றுள்ளன.

இதுகுறித்து மருத்துவ சேவைகள் இயக்கக அதிகாரிகள் தெரிவிக்கும்போது,

தமிழகத்தில் பதிவு உரிமம் பெற ஆக்சிஜன் மற்றும்வென்டிலேட்டர் வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.

மேலும் தனியார் ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் நோயாளிகளை அவசர காலத்தில் கொண்டு செல்வதற்கு தேவையான சாய்வு தள வசதி, லிப்ட் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் கட்டாயம் இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் அவசர காலத்தில் சுவாசக்கோளாறால் பாதிக்கப்படும் நோயாளிகள் பயன் பெறும் வகையில் செயற்கை சுவாசம் அளிக்க ஆக்சிஜன், வென்டிலேட்டர் வசதிகளை ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கை வசதிகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்பினை அனைத்து ஆஸ்பத்திரிகளும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். மேற்சொன்ன அடிப்படை கட்டமைப்புகளை பெற்றுள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகளுக்கு மட்டுமே பதிவு உரிமம் ஆய்வு செய்த பின்னர் வழங்கப்படுகிறது. மேற்சொன்ன உள்கட்டமைப்பு வசதிகளை பெறாமலும், பதிவு உரிமம் பெறாத ஆஸ்பத்திரிகளுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News