பொறியியல் சேவைப்பிரிவை சேர்ந்த ஏ.கே. அகர்வால் ஐசிஎப் பொது மேலாளராக பொறுப்பேற்பு

இந்திய இயந்திரவியல் பொறியியல் சேவைப்பிரிவை சேர்ந்த (IRSME) அதுல் குமார் அகர்வால் ஐசிஎப் பொதுமேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2021-08-04 05:11 GMT

அதுல் குமார் அகர்வால்

இந்திய இயந்திரவியல் பொறியியல் சேவைப்பிரிவை சேர்ந்த (IRSME) அதுல் குமார் அகர்வால் ஐசிஎப் பொதுமேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது வரை ஐசிஎப் பொதுமேலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்ட அகர்வால் இதற்கு முன் புதுடில்லியில் உள்ள இந்திய ரயில்வேயின் தொழிற்சாலைகள் நவீன மயமாக்கும் மத்திய நிறுவனத்தின் (COFMOW, Indian Railways) பிரதான தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

ஜமால்பூரில் உள்ள இந்திய ரயில்வே இயந்திரவியல் மற்றும் மின்னியல் பயிற்சிப்பள்ளியில் 1981ம் ஆண்டுக் குழுவைச் சேர்ந்த அகர்வால் பத்தாண்டுகளுக்கும் மேலாக டீசல் ரயில் எஞ்சின்கள் பராமரிப்பு மற்றும் இயக்கம் சார்ந்த பணிகளில் பல்வேறு ரயில்வே கோட்டம் மற்றும் தலைமை அலுவலகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

வடக்கு ரயில்வேயின் டில்லிக் கோட்டத்தில் பெருமை மிகு சதாப்தி மற்றும் ராஜதானி ரயில்களின் பராமரிப்பினை திறம்பட கையாண்டு வந்தார் என்பதுடன் முதன்முறையாக சதாப்தி ரயிலுக்கு அதிநவீன எல்.எச்.பி ரயில்பெட்டிகள் இணைக்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டதிலும் முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் சிறப்பு பயிற்சி பெற்றார்.

மத்திய ரயில்வேயின் பிரதான தலைமை இயந்திரவியல் பொறியாளராகவும், வடமத்திய ரயில்வேயின் தலைமை ரயில்பெட்டிகள் பொறியாளராகவும், தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தின் கோட்ட மேலாளராகவும், வடக்கு ரயில்வேயின் ஜகாத்ரி ரயில்பெட்டி பராமரிப்புக் கூடத்தின் தலைமை தொழிற்சாலைமேலாளராகவும், மற்றும் பல முக்கிய பொறுப்புகள் வகித்துள்ள திரு. அகர்வால் அவர்கள் நுட்பமான கணினி மற்றும் அதிநவீன இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் இயக்கத் துறைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Tags:    

Similar News