போதையில் வாகனத்தை ஓட்டி விபத்து: அப்பாவி உயிரிழப்பு

ஆம்னி வேன் மோதி சைக்கிளில் சென்ற விவசாயி உயிரிழந்தார். ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை.

Update: 2021-03-15 06:50 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுச்சாமி விவசாயி. இவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சென்று விட்டு, பின்னர் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வாரியங்காவல் கடைவீதி அருகே வந்தபோது, எதிர்ப்புறத்தில் மின்னல் வேகத்தில் வந்த ஆம்னி வேன் ஒன்று பாலுச்சாமி ஓட்டி வந்த சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலுச்சாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த ஹாலோ பிளாக் வீட்டிற்குள் நுழைந்தது. ஆம்னி வேனை ஓட்டி வந்தவர்கள் ஏற்கனவே அதே சாலையில் 13 வயது சிறுவன் ஸ்ரீதர் என்பவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்றனர். அப்போது அருகில் இருந்தவர்கள் ஆம்னி வேனை துரத்தி சென்ற போதுதான் சைக்கிளில் சென்ற பாலுச்சாமி மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆம்னி வேனை ஓட்டி வந்தவர்கள் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும், மதுபோதையில் வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஜெயங்கொண்டம் பகுதியில் கஞ்சா மற்றும் மது போதையில் வாகனத்தை ஓட்டி வருபவர்களின் அலட்சியத்தால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்த பாலுச்சாமி உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் விபத்தில் காயமடைந்த ஸ்ரீதர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News