அரியலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-23 05:58 GMT
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரகாஷ்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழுதுடையான் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் பிரகாஷ்(27). கூலித்தொழிலாளி. இவர் அதே ஊரை சேர்ந்த திருப்பூரில் பணிபுரிந்து வந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் தந்தை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலை கதிரவன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் பிரகாஷை ஒருவருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷிற்கு வழங்கியுள்ளனர்.

Tags:    

Similar News