திருமானூர் அருகே சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.
அரியலூர்மாவட்டம் திருமானூர் அடுத்த க.மேட்டுத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(55). மாற்றுத்திறனாளியான இவர், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவராக இருந்தார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் முன்பு உள்ள சிமென்ட் சாலையில், நெல் காயவைத்து அள்ளிக்கொண்டிருந்தார்.
அப்போது, இவரது வீட்டின் அருகே மேற்கூரை இல்லாத மகாலிங்கம் என்பவரின் வீட்டின் சுவர் தொடர்மழையின் காரணமாக ஊறி இருந்த நிலையில், இடிந்து விழுந்தது.
இதில், இடிபாடுகளில் சிக்கிய சுப்பிரமணியனை, திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.