அரியலூரில் படைவீரர் கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி படைவீரர் கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து துவக்கி வைத்தார்.

Update: 2021-12-07 04:26 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி படைவீரர் கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று (07.12.2021) துவக்கி வைத்தார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது,

நமது தாயகத்தைக் காக்கும் பணியில் முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாளன்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படும் டிசம்பர் 7-ஆம் நாளன்று அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொடிநாள் நிதி வசூல் துவக்கப்படுகிறது.

2020-ம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.25,86,000 கொடிநாள் நிதி வசூலில் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக ரூ.31,19,000 நிதி வசூலித்து 121 சதவீதத்துடன் சாதனை எட்டியுள்ளது.

நடப்பாண்டின் 2021-க்கான அரசின் இலக்கு ரூ.31,03,000 ஆகும். இவ்வருடமும் கடந்த ஆண்டு போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்துறைகளின் ஒத்துழைப்புடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் லெப்.கமாண்டர் தி.சங்கீதா (ஓய்வு), முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் ம.கலையரசி காந்திமதி மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News