அரியலூர்:ஆதனகுறிச்சியில் வரும் முன்காப்போம் திட்ட மருத்துவ முகாம்

அரியலூர் மாவட்டம் ஆதனகுறிச்சி கிராமத்தில் வரும் முன் காப்போம் மருத்துவ திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்ததார்.

Update: 2021-10-18 08:54 GMT

அரியலூர் மாவட்டம் ஆதனகுறிச்சியில் நடந்த மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகளை  அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.


அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆதனகுறிச்சி கிராமத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று  துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிவசங்கர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த   போர்க்கால நடவடிக்கைகளால் கொரோனா தொற்று தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மேலும், கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உயர்தரத்திலான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்  வருமுன்காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் வாயிலாக மருத்துவ அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அக்கிராமத்திலுள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமத்திலுள்ள பொதுமக்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தேவையான ஸ்கேன் மேற்கொள்ளுதல், கர்ப்பபைவாய் புற்றுநோய் பரிசோதனை, இருதய சுருண்ட பரிசோதனை ஆகியவைகள் மேற்கொள்ளப்பட்டு, குறைபாடுள்ளவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதுடன், அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், இத்திட்டத்தினை அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும்  முதலமைச்சர் மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு நலவாழ்வு வாழ்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருமுன்காப்போம் திட்டத்தின்கீழ் பொது அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு மருத்துவம், மகப்பேறு சிறப்பு மருத்துவம், சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவம், இருதய நோய் சிறப்பு மருத்துவம், நரம்பியல் மற்றும் மனநல மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், சித்தா / ஆயுஷ் மருத்துவம், தொழுநோய் மற்றும் தோல்நோய் மருத்துவம், காசநோய் சிகிச்சை, பல்மருத்துவம், குழந்தை நல மருத்துவம் ஆகியவற்றிற்கான மருத்துவ அலுவலர்களால் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு பாராட்டு கேடயங்களையும் வழங்கினார்.

முன்னதாக, புதுப்பாளையம் கிராமத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பில் அரசு நலவாழ்வு மையத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். 3 நபர்களுக்கு பிறப்பு சான்றிதழ்களையும், தொழுநோயால் பாதிப்படைந்து குணமான 3 நபர்களுக்கும், தற்காலிக குடும்பநல முறைகள் பேணும் 2 தாய்மார்களுக்கும், ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகளையும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 2 நபர்களுக்கும், 20 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 20 நபர்களுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி, செந்துறை வட்டாட்சியர் குமரையா, வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News