வேளாண் வணிகத்துறையின் சார்பில் அரியலூர் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
அரியலூர் விவசாயிகளுக்கு வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேளாண் தொடர்பானபயிற்சிகள் அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் வேளாண் வணிகத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், ஏலாக்குறிச்சி கிராமத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (28.06.2022) நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் பழங்கள், காய்கறிகள் மற்றும் சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் தொழில்நுட்ப கையேட்டினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டு, வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்.
இந்த பயிற்சி கையேட்டில் உணவு பதப்படுத்துதலின் அடிப்படை கொள்கைகளும், பதனிடும் முறைகளும், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு கவனிக்க வேண்டிய காரணிகள், பழப்பானங்கள், தயார் நிலை பருகும் பானம், பழப்பாகு, பழப்பிசின், கனியூறல், பழமிட்டாய்கள், ஊறுகனி, பழப்பார்கள், பழம் மற்றும் காய்கறிகள் பதப்படுத்த தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரம், சிறுதானியங்கள், மதிப்புக்கூட்டிய பொருட்கள் போன்றவை குறித்தும் செயல்விளக்கம் மற்றும் தயார் செய்தல் குறித்தும் இடம் பெற்றுள்ளது.
மேலும், இரண்டு நாள் பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு வேளாண் வணிகத்துறையின் சார்பில் பல்வேறு வேளாண் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள விவசாயிகள் இதனை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இம்முகாமில், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சிங்காரம், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.