சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரியார்கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூகசீர்திருத்தக் கருத்துகள், சிறுகுறிப்பு, ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

Update: 2021-09-01 10:13 GMT

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான பரிந்துரைகளுடன் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்ட தகவல்: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995 -ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.1,00,000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளரை தமிழக முதலமைச்சர் தேர்வு செய்கிறார்.

2021 -ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

தங்களது விண்ணப்பம் தங்களின் பெயர், பிறந்த இடம் மற்றும் நாள், தாய் தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி (தொலைபேசி எண்ணுடன்), கல்வி தகுதி, இனம் மற்றும் ஜாதி, தொழில், சமூக நீதிக்காக பாடுபட்ட விவரம், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்தக் கொள்கை குறித்து சிறு குறிப்பு, கலை இலக்கியம் சமூக பணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2021 -ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2021 ஆகும். மேற்படி தகுதியுடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Tags:    

Similar News