அரியலூர்மாவட்டத்தில் தொழில் முனைவோர் தொழில் துவங்க ரூ149 லட்சம் இலக்கீடு

இத்திட்டத்தின் கீழ் 21-22ஆம் நிதியாண்டிற்கு அரியலூர் மாவட்டத்திற்கு 15 பயனாளிகளுக்கு மானிய தொகையாக ரூ.149 லட்சம் இலக்கீடு நிர்ணயம்.

Update: 2021-07-24 07:19 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:

தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கும் அரியலூர் மாவட்ட தொழில் மையம் படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, தொழில் முனைவோர்க்கு தொழில் தொடங்க ஒரு வழிகாட்டி மையமாக செயல்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கிட தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டமே "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)" ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கவும், வங்கிகள் மூலம் 25 சதவிகிதம் மானியத்துடன் (ரூ.30 இலட்சத்திற்கு மிகாமல்) கூடிய கடன் உதவி பெறவும் மற்றும் 3 சதவிகிதம் பின்முனை வட்டி மானியம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2021-22ஆம் நிதியாண்டிற்கு அரியலூர் மாவட்டத்திற்கு 15 பயனாளிகளுக்கு மானிய தொகையாக ரூ.149லட்சம் என இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 3 பயனாளிகளுக்கு மானிய தொகையாக ரூ.11.85 லட்சம் எனவும், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் எனவும் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் பயன்பெற பொது பிரிவினர் குறைந்தபட்சம் 21 வயது முதல், அதிகபட்சம் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் (பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / பெண்கள் / மாற்றுத் திறனாளிகள் / முன்னாள் இராணுவத்தினர் / தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்) குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரையிலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்கல்வி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலும் இருத்தல் வேண்டும். திட்டத்தில் சுற்றுப்புற சூழலுக்கு இயைந்த அனைத்து லாபகரமான உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை https://msmeonline.tn.gov.in/needs/index.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், தற்போது COVID-19 காரணமாக விண்ணப்பங்கள் 30.09.2021 வரையிலான காலத்திற்கு நேர்முக தேர்வின்றி வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜா நகரம், அரியலூர் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04329-228555, 8925533925, 8925533926 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News