அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கூட்டம்

அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2022-02-01 16:33 GMT

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் மாநில தலைவர் பூ. விசுவநாதன் பேசினார்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரில்  நேற்று நடைபெற்ற அச்சங்க செயற்குழு கூட்டத்தில்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன், நகைக் கடன் இவைகளை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணைக்கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

இலவச மின் இணைப்பில் மீட்டர் பொருத்துவதை மாநில அரசு கைவிட வேண்டும். மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அரியலூர் மாவட்டம் தூத்தூர்-தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை இடையே குற்றிடத்தின் குறுக்கே கதவணையுடன் தடுப்பணைக் கட்ட வேண்டும்.

டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். முந்திரி விவசாயிகளுக்கு முந்திரிக் கன்றுக்கான மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை தலைமை செயலக அலுவலகத்தை வரும் 10ம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் மா.கெங்காத்துரை, மாநில பொதுக் குழு உறுப்பினர் ஆர்.ராசேந்திரன்,ஒன்றியத் தலைவர்கள் சாமிதுரை, இளவரசன்,மதியழகன்,ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்டத் தலைவர் ஜெ.பரமசிவம் வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News