அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
அரியலூர் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.4.89 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்து, 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.2.25 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகளையும், 22 நபர்களுக்கு தலா ரூ.12,000 வீதம் ரூ.2.64 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார். மேலும், கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 268 மனுக்களை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.