அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 28ம் தேதி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

அரியலூர் மாவட்டத்தில் 28ம்தேதி காலை 9.30 மணிக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

Update: 2022-07-16 06:52 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி. 

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கருணாநிதி பிறந்த நாளையொட்டி வரும் 28ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் பள்ளி மாணவர்களுக்குத் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்கப்பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  காலை 9.30 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.

இவை அல்லாமல் அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2000/- வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது. இப்போட்டியானது காலை 10.00 மணிக்குத் தொடங்கப்படும் எனவும், அரியலூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறும் அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News