அரியலூர் அருகே சாலை விபத்தில் பலியானவரின் உடலுடன் மறியல் போராட்டம்
அரியலூர் அருகே சாலை விபத்தில் பலியானவரின் உடலுடன் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகளை அதே ஊரில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். தனது மகள் வீட்டிற்கு சென்று மகள் வயிற்றுப் பேரன் ரஞ்சித்தை ஸ்கூட்டியில் அழைத்துக்கொண்டு உடையார்பாளையம் பைபாஸ் சாலையில் ஓரமாக சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் வந்த வாகனங்கள் மோதியதில் விபத்துக்குள்ளான தங்கராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் தொடர் விபத்துகள் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த உடையார்பாளையம் காவல்துறையினர் மற்றும் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், டி.எஸ்.பி. ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
துறை ரீதியான அலுவலர்களை தொடர்பு கொண்டு அப்பகுதியில் சர்வீஸ் சாலை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து பிரேதத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ரஞ்சித் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளான்.