தோட்டக்கலைதுறை மானியம்பெற இணையதளம் மூலம் பதிவு: கலெக்டர் ஆலோசனை

Horticulture Subsidy - தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகள் இணையதளம் வழியாக பதிவு செய்து மானியங்கள் பெற்றுக் கொள்ள கலெக்டர் அறிவிப்பு.

Update: 2022-07-25 06:18 GMT

பைல் படம்.

Horticulture Subsidy -இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 2022-23ம் நிதியாண்டில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டம் முதலிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டங்களில் உயர் விளைச்சல் தரும் காய்கறிகள், முந்திரி, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி ஆகிய பயிர்களின் பரப்பு அதிகரித்தல், அங்கக பண்ணையம், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பசுமை குடில், நிழல்வலை குடில் அமைத்தல், சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு அறை அமைத்தல், துல்லிய பண்ணையத்திட்டம், உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டம், வாழையில் ஊடுபயிராக காய்கறிகள், நெகிழி கூடைகள், அலுமினிய ஏணிகள், வலைக்கருவி, முகப்பு விளக்கு, கவாத்து கத்திரிகோல், தெளிப்பான் (8-12 லிட்டர்), இனகவர்ச்சி பொறி, மஞ்சள் ஒட்டு பொறி, சொட்டுநீர் பாசனம் அமைத்தல் போன்றவற்றிற்கு நடப்பு நிதியாண்டில் (2022-23) மானியம் பெற விரும்பும் விவசாயிகள் இணைய தளம் வழியாக பதிவு செய்து மானியங்கள் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளத்தில் உள்ள தோட்டக்கலை மானிய விண்ணப்பத்தில் விவசாயின் பெயர் மற்றும் முகவரி, ஆதார் அட்டை எண், கிராமம், வட்டாரம், மாவட்டம் முதலான விபரங்களை பூர்த்தி செய்தல் வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்தவுடன் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்வு செய்தல் வேண்டும்.

அத்திட்டத்தில் உள்ள இனம், உப இனம், முன்மொழியப்பட்ட பயிர், தேவையான அளவு ஆகியவற்றை பூர்த்தி செய்தல் வேண்டும். விவசாயின் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்தவுடன் குறுஞ்செய்தி விவசாயியின் கைப்பேசி எண்ணிற்கு வந்தடையும். இணைய வழியில் பதிவு செய்யத் தெரியாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறுமாறு என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News