அரியலூர் மாவட்டத்தில் வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்கப் போட்டிகளில் 108 மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றனர்.
சர்வதேச அளவிலான 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறவுள்ளது. 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சதுரங்க போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, மாரத்தான், இருசக்கர வாகனப் பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 14.07.2022 அன்று பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு 20.07.2022 அன்று வட்டார அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டது.
வட்டார அளவிலான சதுரங்கப் போட்டிகள் அரியலூர் வட்டாரத்தில் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திருமானூர் வட்டாரத்தில் கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், தா.பழூர் வட்டாரத்தில் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், செந்துறை வட்டாரத்தில் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், ஆண்டிமடம் வட்டாரத்தில் வி.ஆண்டிமடம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும் நடத்தப்பட்டது.
இந்த சதுரங்கப் போட்டிகளில் அரசு நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 278 பள்ளிகளைச் சேர்ந்த 604 மாணவர்கள், 491 மாணவிகள் என மொத்தம் 1,095 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
வட்டார அளவிலான இந்த சதுரங்கப் போட்டியில் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும், 9 முதல் 10ஆம் வகுப்பு வரையிலும், 11 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் முதல் 03 இடங்களை பெற்ற தலா 18 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 108 மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்;டுள்ளனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற இவர்களுக்கு 25.07.2022 அன்று அஸ்தினாபுரம் மாதிரி பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.