ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் மீது வழக்கு: 2 சுமை ஆட்டோ பறிமுதல்
செந்துறை அருகே, ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது; 2,350 கிலோ அரிசி மற்றும் 2 சுமை ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த, 2 சுமை ஆட்டோக்களை மறித்து சோதனை செய்தனர். இதில், தமிழக அரசால் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டிவந்த நின்னியூர் பாண்டியன், மருதூர் சிவபெருமாள் மற்றும், உடன் வந்த குழுமூர் மணிகண்டன், மருதூர் செந்தில்நாதன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, 2,350 அரிசி மற்றும் 2 சுமை ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.