அரியலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

அரியலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2021-10-06 06:15 GMT

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டத்தில்  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி அதனை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனத்தின் மூலம் பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது. இந்த பிரசார வாகனத்தை  மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், நடப்பாண்டு பருவ மழையின் முழு பயனையும் பெரும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி அதனை பராமரித்து மழைநீரை சேமிக்கும் வகையில் பொதுமக்களிடையே வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மொட்டை மாடி சுத்தப்படுத்துதல், மழைநீர் வடிக்குழாய்களில் அடைப்பு மற்றும் துவாரங்களை சரிசெய்தல்,தொட்டி , கசிவுநீர் குழியிலுள்ள கூழாங்கல் கருங்கல் ஜல்லியை சுத்தம் செய்து மீண்டும் நிரப்புதல்,கட்டமைப்புகளில் உள்ளே மழைநீர் செல்வதை உறுதிப்படுத்துதல், சேமிப்பு கிணற்றில் உள்ள கசடுகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, நீரின் தரம் மேன்மையடையும்.

மேலும், மழைநீரை வீணாக்காமல் சேமிக்க கூரையின் மேல் விழும் மழைநீரை சேகரித்தல்,திறந்த வெளி கிணறு மூலம் மழைநீரை சேகரித்தல், குழாய் கிணறுகள் மூலம் மழைநீரை சேகரித்தல்,கழிவுநீர் குழிகள் துளையுடன் கூடிய கசிவு நீர் குழிகள் முறையின் மூலம் வீடுகளில் மழைநீரை சேமிக்கலாம்.

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட மழைநீர் சேகமிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து தெரிந்துகொள்வதுடன், தங்கள் இல்லங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மு.முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) அ.பாரதி, உதவி நிர்வாக பொறியாளர்கள் அ.சுந்தரராஜ், சு.இளங்கோவன், உதவி நீர்வள வள்ளுநர் கிரிராஜா, உதவிப் பொறியாளர்கள் சிவசங்கரன், கண்ணதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News