செந்துறை அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த அயன்தத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட முல்லையூர் கிராமத்தில் சாலை, குடிநீர், பேருந்து, ரேஷன்கடை உட்பட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் தளவாய் - பெண்ணாடம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, இதுகுறித்து பலமுறை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம்சாட்டினர். தகவலறிந்து வந்த தளவாய் போலீஸார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.