மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி
மாநில அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி சென்னையில் நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி ஏப்ரல் மாதம் சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள சென்னை மாநில அளவிலான விற்பனை கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்த முழு விவரம் மற்றும் புகைப்படம், சுய உதவிக்குழுவின் பெயர் மற்றும் முழு முகவரியுடன் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகம் அறை எண்.215-ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்.04329-228505 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.