அரியலூர் மாவட்டத்தில் 250 தனியார் பள்ளி வாகனங்களை போலீசார் ஆய்வு
பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 250 பள்ளி வாகனங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
தமிழகம் முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு இயக்கப்பட்டு வரும் பள்ளி வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்து அலுவலக வளாகத்தில் ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் போக்குவரத்து அலுவலர்கள் வாகனங்களை ஆய்வு செய்தனர்.
பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசரகால வழி ஆகியவை முறையாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்கள் அமரக்கூடிய இருக்கைகள் வாகனங்களின் படிக்கட்டுகளின் உயரங்கள், வேகக்கட்டுப்பாட்டு கருவி செயல்பாடு உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்பட்டு குறைபாடுகள் இருக்கும் வாகனங்களுக்கு அனுமதி சான்று நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் குறைகளை சரி செய்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்னர் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மாவட்டத்தில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகளை சேர்ந்த 250 வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, அனைத்து பள்ளி வாகனங்களிலும் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடித்து இயக்க வேண்டும்.
வாகனங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகளை சரிசெய்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும்.அனுமதி பெறாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.முக்கியமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளி வாகனங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்.
சி.சி.டி.வி. கேமரா பொருத்தாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.