அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல்

தமிழகத்தில் நடைமுறையிலுள்ள ஞாயிற்றுக்கிழமை பொது முழு ஊரடங்கால் அரியலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.

Update: 2022-01-16 10:53 GMT

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்.

கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக, தமிழகத்தில் நடைமுறையிலுள்ள ஞாயிற்றுக்கிழமை பொது முழு ஊரடங்கால் அரியலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் வார நாட்களில் இரவு 10 முதல் காலை 5மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், சுற்றுலா தலங்கள், கோயில்களில் ஜன.18 ம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

2 வது ஞாயிற்றுக்கிழமையான அரியலூர் மாவட்டத்தில் முழு பொது ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக, பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று காணும் பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

வழக்கமாக காணும் பொங்கல் பண்டிகையின் போது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோயில், திருமானூர் கொள்ளிடம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், அரியலூர் செட்டி ஏரி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று சிற்றுண்டி அருந்தி விளையாடி மகிழ்வார். குழந்தைகள் இந்நாளை மிகவும் குதூகலமாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டு முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தனர். மேலும், இன்று முழு பொது முடக்கத்தையொட்டி வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்தகம், பாலகம் மட்டும் வழக்கம் போல் திறந்திருந்தன. முக்கிய அலுவல் காரணமாக சில வாகனங்கள் போலீஸாரின் அனுமதியுடன் இயங்கின.

Tags:    

Similar News